மேஷம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருப்பதாலும் தொழிலுக்குரிய
வீட்டில் யோகாதிபதி சூரியன் இருப்பதாலும் தை மாதம் மேஷ ராசிக்கு நல்ல பலன்களை
தரும் மாதமாக இருக்கும். இந்த மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம்
போன்றவைகளில் முன்னேற்றங்களும், லாபங்களும் இருக்கும். ராசிநாதன் வலுவாக
இருப்பதால் உங்களின் மனஉறுதியும் தற்போது நன்றாக இருக்கும். மலையே உடைந்து
தலைமீது விழுந்தாலும் நிலைகுலைய மாட்டீர்கள்.
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள்.
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இது லாபம் தரும்
மாதம்தான். அதேநேரத்தில் தொழில் நன்றாக நடந்தாலும் விரயங்கள் வந்து சேமிப்பு
தடுக்கப்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. கறுப்புநிறப் பொருட்கள்
சம்பந்தப்பட்டவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள்
போன்றவர்களுக்கு மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வருமானம் வரும். கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியும். இதுவரை
செய்து முடிக்க முடியாத விஷயங்களை தற்போது எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.
கடந்த சில மாதங்களாக மனதைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள்
தீர்வதற்கு ஆரம்பிக்கும். பாதித்துக் கொண்டிருந்த சங்கடமான பிரச்சினைகள் விலக
ஆரம்பிக்கும். தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம்
ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும்.
ரிஷபம்:
ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் நட்பு வீடுகளில் இருப்பதால் தை மாதம்
உங்களுக்கு நல்ல மாதம்தான். வாக்குஸ்தானத்தை சனி பார்ப்பதால் எவரிடமும்
வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். பணவிஷயத்தில் கவனம்
தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள்
இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தை கடைப்பிடியுங்கள்.
தேவையற்ற விஷயங்களில் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தாயார் வழியில் செலவுகள் வரலாம். தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும்.
நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும்
ஜாமீன் போட வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க
வேண்டாம். சகோதர உறவு முன் பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப
வேண்டாம். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில்
இனிமையான சம்பவங்கள் உண்டு.
இளைய பருவத்தினர் சிலருக்கு சந்தோஷமான விஷயங்கள் இருக்கும். கலைஞர்களுக்கு
வாய்ப்புக்கள் தேடி வந்தாலும் உழைத்த கூலியை பெறுவதற்கு போராட வேண்டி
இருக்கும். இளையபருவ ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது எதிர்கால
மாற்றங்களுக்கான அமைப்புகள் நடந்து கொண்டிருக்கும். குறிப்பாக உங்களில் பலர்
எதிர்கால வாழ்க்கை அமைப்பிற்கான நிகழ்வுகளை சந்திப்பீர்கள். 30
வயதிற்குபட்டவர்கள் மனதில் திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்துவீர்கள்.
மிதுனம்:
தை மாதம் வேலை தொழில் விஷயங்களில் மிதுனத்திற்கு நல்ல மாதமாகவே அமையும். ஆனால்
ஏழாமிடத்தில் இருக்கும் சனியினால் கூட்டுத்தொழில், நண்பர்கள், குடும்பம்
பாதிக்கப்படும் என்பதால சிலருக்கு பணநெருக்கடிகள் இருக்கும். பணம் சம்பந்தமாக
கொடுக்கும் வாக்கு பலிக்காது. ராசியோடு ராகு, செவ்வாய் சம்பந்தப்படுவதால்
தேவையற்ற கோபத்தையும், அடுத்தவர் மேல் காட்ட வேண்டிய எரிச்சலையும் வீட்டில்
காட்டுவீர்கள் என்பதால் எதிலும் நிதானம் தேவை.
மிதுனராசிக்காரர்கள் ஒருமுறை ராகு பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி,
திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத் தலங்களுக்கு சென்று
ராகுபகவானுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. பழைய கடன்களை அடைக்க புதிய
கடன் வாங்க வேண்டி இருக்கும். ராசிநாதன் வலுவாக இருப்பதால் கெடுபலன்கள்
எதுவும் வரப்போவது இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள்.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு.
ஆறாமிடம் வலுப்பெறுவதால் எதிர்ப்புகள் இருக்கும். சிலருக்கு நம்பிக்கை
துரோகங்கள் நடக்கும். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை
தேவை. சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். செய்யாத
குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும்
வரலாம் என்பதால் எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. என்னதான் பிரச்னை
என்றாலும் சுக்கிரன் வலுவுடன் இருப்பதால் அனைத்தையும் ஜெயிப்பீர்கள்.
கடகம்:
கடகராசிக்கு யோகாதிபதிகளான செவ்வாய், சூரியன் நல்லநிலையில் இருப்பதோடு,
குருவும் சூரியனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரங்களில் இருப்பதும் யோகமான
அமைப்புகள் என்பதால் தை மாதத்தில் எதையும் சமாளிப்பீர்கள். நீண்டகாலமாக
நடக்கும் செக் ரிட்டர்ன், குடும்பபிரச்னை வழக்குகளில் சாதகமான திருப்பங்கள்
இப்போது உண்டு. சிலருக்கு திருமணத்திற்கான நல்ல செய்திகள் கிடைக்கும். மெஷினரி
சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு இது உயர்வு தரும் மாதம்.
மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்து வந்த கவலைகள் இனி தீரும். நீண்ட காலமாக
முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த பிள்ளைகளின் திருமண விஷயங்கள் விஷயங்களில்
இப்போது நல்லவை நடக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் வேலை விஷயங்களிலும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். பொறுப்பான பதவி எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. எதிலும் முதல் நிலையில்
இருப்பீர்கள். பணவரவும் உண்டு.
குறிப்பிட்ட ஒருபலனாக இந்த மாதம் எதிலும் விட்டுக் கொடுத்து போங்கள்.
எல்லாவற்றிலும் ஈகோ பார்ப்பதே கடகத்தினரின் பலமாகவும் சிலநேரங்களில்
பலவீனமாகவும் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள்.
வரிகள் வசூலிக்கும் துறையினருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில்
நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். கணவன் மனைவி
உறவு சிறப்பாக இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள்.
சிம்மம்:
சிம்மநாதன் சூரியன் ஆறில் மறைவது சிறப்பான நிலை அல்ல என்றாலும் ராஜ யோகாதிபதி
செவ்வாய் ஆட்சி பெறுவதால் கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி.
ஒன்பதாமிடத்திற்கு குருவின் பார்வை இருப்பது சிறப்பு என்பதால் வேலை, தொழில்,
வியாபாரம் போன்றவற்றின் மூலம் சிம்மத்திற்கு நன்மைகள் உண்டு. உங்களில்
கடல்துறை, மீனவர்கள், கடலோரங்களில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய
விஷயங்கள் உண்டு,
வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ்
பெறுவார்கள். இதுவரை நல்ல வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம்
தரக்கூடிய ஜீவன அமைப்புகள் அமைந்து இனிமேல் மாதமானால் ஒரு நிம்மதியான வருமானம்
வரக்கூடிய சூழல் வரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இனி இருக்கும்.
அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது
நல்லது. நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது
அவசியம்.
வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்படும். தொழில் விஷயங்களில் இதுவரை இருந்து
வந்த தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளி சிறிதளவு முயற்சி செய்தாலே
மிகப்பெரிய நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது
என்பதால் தயக்கத்தை விட்டொழிக்கவும். எந்த ஒரு புதிய முயற்சியையும் துணிந்து
செய்யுங்கள். வெற்றி கிடைக்கும்.
கன்னி:
மாத ஆரம்பத்தில் தைரிய ஸ்தானாதிபதியான செவ்வாய் மூன்றில் வலுப்பெற்ற
அமைப்பில், யோக நிலையில் இருப்பதால் கன்னிக்கு இது உற்சாகத்தையும்,
உத்வேகத்தையும் அளிக்கும் மாதமாக இருக்கும். வேலை தொழில் வியாபார அமைப்புக்கள்
சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும்,
அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு
நல்ல பலன்கள் நடக்கும்
இதுவரை எதிர்ப்புகளையும், வேதனைகளையும், வீண்பழிகளையும், வம்புச் சண்டைகளையும்
சந்தித்து வந்தவர்கள் இனி நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். அலுவலகங்களில் இருந்த
பின்னடைவுகள் ராசிநாதன் வலுவால் சமாளிக்கப்படும். ஏற்கனனவே வருமானக் குறைவில்
இருப்பவர்களுக்கு அது நீங்கி இனி நல்ல பணவரவு வரக்கூடிய அமைப்பு இருக்கும்.
குடும்பத்திலும் சந்தோஷம் தரக்கூடிய சுபகாரியங்கள் உண்டு. நெருங்கிய உறவினர்
அல்லது நண்பர் ஒருவரால் உதவிகள் இருக்கும்.
நான்காம் வீட்டில் சனி இருப்பதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் எவரிடமும்
கோபப்படாமல் இருக்க வேண்டியது அவசியம். யாராவது நிதானம் இழந்து பேசிவிட்டால்
இது தீவிரமான கருத்து வேறுபாடுடன் சண்டையாகி நிரந்தர பிரிவு ஏற்படும் ஆபத்து
இருப்பதால் எங்கும் எதிலும் கவனம் அவசியம். வேலையில் பாராட்டப் படுவீர்கள்.
இளைய பருவத்தினருக்கு அவர்கள் தகுதிகேற்ற வேலை கிடைக்கும். சிலருக்கு
தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும்.
துலாம்:
தை மாதத்தின் பிற்பகுதியில் துலாமுக்கு மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.
முக்கியமாக உங்களில் கடன் தொல்லைகளில் இருப்பவர்களுக்கு இப்போது கடனை
அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும்
கூடும். நன்மைகள் மட்டுமே உள்ள மாதம் இது. சிலருக்கு வீடு வாகன விஷயங்களில்
மாற்றங்கள் இருக்கும். ஏழரைச்சனி முடிந்து விட்டதால் இனிமேல் துலாம் ராசிக்கு
துன்பங்கள் எதுவும் இல்லை.
குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். பங்குதாரர்கள்
வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் உண்டு. மனைவியால் நன்மைகள்
இருக்கும். இதுவரை அடுத்தவரை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள்
மற்றவர்களுக்கு உதவுவீர்கள். விளையாட்டு துறையினர், கலைஞர்கள்,
பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்பு முனையாக அமையும்.
ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.
வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். திருமணம்
ஆகாமல் இருப்பவர்களுக்கு தற்போது திருமணம் கை கூடும். விவசாயிகள், வியாபாரிகள்
போன்ற துறையினருக்கு இந்த மாதம் சிறந்த மாதம். அழகுக்கலை, மாடலிங், முடி
திருத்துவோர், சமையல், லாட்ஜிங் சம்பந்தப்பட்ட துறையினருக்கு சிக்கல்கள்
தீரும் மாதமாக இது இருக்கும். பொதுவாக அனைத்து தரப்பு துலாம் ராசியினரும்
கொஞ்சம் நிம்மதியாக உணருவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகராசிக்கு ஜென்மச்சனியாக சோதனைகளைத் தந்து கொண்டிருந்த சனிபகவான்
விலகி விட்டதால் இனி சோதனைகள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். நன்மைகள் நடக்க
இருப்பது தெரியும் வகையில் சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் இருக்கும். சனி
விலகியதோடு ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் ஆட்சியாக இருப்பதால் இதுவரை
கஷ்டப்பட்ட உங்களுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முதுமொழிப்படி இந்த
மாதம் நல்வழி திறக்கும்.
உங்களில் சிலர் லோன் போட்டு வீடு கட்டவோ வாங்கவோ ஆரம்பங்களைச் செய்வீர்கள்.
இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை
மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில்
சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர்
லாபங்களை பெறுவார்கள். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால்
எச்சரிக்கையாக இருங்கள்.
மாதம் முழுவதும் சூரியன் பலத்துடன் இருக்கிறார் என்பதால் இந்த மாதம்
குடும்பத்தில் சந்தோஷமான செய்திகள் இருக்கும். இந்த அமைப்பு வேலை, தொழில்,
வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளை வலுப்படுத்தும் என்பதால் சுய தொழில்
புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் வருமானம் இருக்கும். இதுவரை கிடைக்காத
உதவிகள் கிடைக்கும் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் அனைத்து விருச்சிக
ராசிக்காரர்களுக்கும் இனிமேல் நல்ல காலம் உண்டு.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு கடந்த சில வாரங்களாகவே மாற்றங்களுக்கான விஷயங்கள்
நடந்து கொண்டிருக்கும். அந்த மாற்றங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையானதாகவே
இருக்கும். தைமாதம் தனுசுக்கு பெரிய பின்னடைவுகளை தராது என்றாலும் வேலையில்
நிம்மதியின்மை, டார்கெட் போன்ற விஷயங்களால் மன அழுத்தம், மேலதிகாரியுடன்
கருத்து வேறுபாடு போன்ற பலன்களை இளைய பருவத்தினர் சிலருக்கு தரும். தொழிலில்
மாற்றங்கள் இருக்கும்.
தனுசு ராசி இளையவர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்கு வாழ்க்கை சிறிது
மாற்றத்துடன் செல்லத் துவங்கும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய
முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். இருக்கும் வேலை, தொழிலை கவனமாகப்
பாருங்கள். அரசனை நம்பி புருஷனைக் கைவிடுவது போன்ற சில சம்பவங்கள் நடக்கும்.
எதிலும் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படுவது நல்லது. மேலதிகாரிகளுக்கு
தெரியாமல், அவர்களின் அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள்.
ராசியில் இருக்கும் சனியால் மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன்
குறைவாக இருக்கும். கடும் முயற்சிகளுக்குப் பிறகுதான் நல்லவைகள் நடக்கும்.
என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. கணவன், மனைவி
யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.
பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன்
கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே
கூடாது.
மகரம்:
மகரத்திற்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சியாக இருப்பதால் தடையாகி வந்த சில
விஷயங்கள் இப்போது கிடைக்கும். இரும்பு, பெயின்ட், பெட்ரோல் தொழில்
செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில்
முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். நீண்டநாட்களாக
இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள்
உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும்
இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள்
சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு
எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம்
நடக்கும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள்
உண்டு. சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும்.
மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட
வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி
தீர்த்துக் கொள்வது நல்லது. சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த
மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும். பணவரவு, தனலாபம் மற்றும் பொருளாதாரம்
நன்றாக இருக்கும் என்பதால் தைமாதம் முழுவதும் எந்த விதமான பணச்சிக்கல்களோ,
எதிர்ப்புகளோ உங்களுக்கு இருக்காது என்பது உறுதி.
கும்பம்:
கும்பராசிக்கு எதிர்மறை பலன்கள் எதுவும் தைமாதம் இருக்காது. உங்கள் திறமைகள்
வெளிவரும் மாதம் இது. அதிர்ஷ்டம் இப்போது கை கொடுக்கும். முக்கியமான சில
பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக
சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பது உங்கள் விஷயத்தில்
நடக்கும். நல்லது நடக்கும் நல்லது நடக்கும் என்று வீட்டுக்குள்ளேயே சோம்பி
இருக்காதீர்கள். வெளியே வந்து முயற்சிகளை செய்யுங்கள்.
கோட்சார கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் கும்பத்தினர் மனதளவிலும்
உடல்நிலையிலும் பத்துவயது குறைந்த புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும்
அனுபவிப்பீர்கள். இதையும் மீறி உங்களுக்கு நல்லவைகள் நடக்கவில்லை என்றால்
பிறந்த ஜாதகப்படி கடுமையான தசா புக்திகள் நடக்கிறது என்று அர்த்தம். நீண்ட
நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.
பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.
ராசிநாதனின் நண்பர்களான சுக்கிரன், புதன் இருவரும் சுபத்தன்மை பெற்றிருப்பதால்
இதுவரை உங்களை எதிர்த்து வந்தவர்கள் மனம் மாறி உங்கள் கருத்துகளை
ஆதரிப்பார்கள். வலுப்பெற்றிருக்கும் சுக்கிரன் பெண்களால் செலவுகளை தருவார்
என்பதால் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாக யோசித்து செய்வது நல்லது.
தொல்லை கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் தீரப் போகின்றன. புதிய நண்பர்கள்
கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். குறைகள் இல்லாத மாதம் இது.
மீனம்:
மீனத்திற்கு யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை
வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். ராசிநாதன் குரு எட்டில் அமர்ந்ததால்
கடந்த சில வாரங்களாக இருந்து வந்த பின்னடைவுகள் தற்போது நீங்க ஆரம்பிக்கும்
கெடுதல்கள் உடனே நடக்கும், நல்லவைகள் மெதுவாகத்தான் நடக்கும் என்பதன்படி
வரப்போகும் மாற்றம் நிதானமாகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் சற்றுக் கூடுதலாகவே இருக்கும்.
தன,பாக்கியாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் தொழில்ரீதியாக செய்யும்
முயற்சிகள் வெற்றிபெற்று பணவரவு இருக்கும். பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவதால்
இதுவரை கிடைக்காத திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான
ஆரம்பங்கள் சிலருக்கு இருக்கும். தொழில், வேலை போன்ற விஷயங்கள் எவ்வித
பாதிப்பும் இல்லாமல் இருக்கும் என்பதால் மீன ராசிக்காரர்கள் எதிலும் வெற்றி
பெறும் மாதம் இது. பிடிக்காத மேலதிகாரி மாறுதல் ஆவார்.
வியாபாரம் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம் இல்லாமல்
இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கடன் தொல்லைகள் கட்டுக்குள்
இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ் விவகாரங்கள் பாதகம் தராது. தொழிலாளர்களுக்கு
பணிச்சுமை குறையும். தொழில் அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும். அனைத்து
விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில் உங்களுக்கு
சாதகமாகவே முடியும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் உண்டு.
No comments :
Post a Comment