Saturday, August 19, 2017

VIRUCHIGAM : 2017 – GURU PEYARCHI – விருச்சிகம் : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த முறை நன்மை அளிக்கும் இடமாக சொல்லப் படும் பதினொன்றாம் இடத்தில் இருந்த குருபகவான் தற்போது செலவுகளையும், விரையங்களையும் தரும் ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார்.

மேம்போக்காகப் பார்த்தால் இந்தப் பெயர்ச்சியின் மூலம் குருபகவான் நல்ல இடத்தில் இருந்து கெடுதல் தரும் இடத்திற்கு மாறுவது போலத் தோன்றும்.

குருப்பெயர்ச்சி, ராகு, கேதுப்பெயர்ச்சி போன்ற கோட்சார கிரக மாற்றப் பலன்களே பொதுவான பலன்கள்தான் என்றாலும் அதிலும் துல்லியமான நுட்ப விதிகளைப் பயன்படுத்தித்தான் நான் பலன் சொல்லுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

சென்ற வருடக் குருப் பெயர்ச்சியின் போது நடந்த ஒரு ஜோதிட மாநாட்டில் தற்கால மூத்த ஜோதிடர்களில் முதல்வர், எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள 95 வயது பெரியவர் நக்கீரர் நடராஜர் அய்யா அவர்களின் முன்னிலையில் பேசும் போது “ஒருவருக்கு கடுமையான ஏழரைச்சனி நடக்கும் போது மற்ற கிரகப் பெயர்ச்சிகள் பலன் தராது” என்று பேசினேன்.

உண்மையில் ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும் போது சனியின் கெடுபலன்கள் மட்டுமே முன்னே நிற்கும். மற்ற கிரகங்கள் நன்மை தரும் அமைப்பில் இருந்தாலும் கூட அதை சனி தடுப்பார்.

நிகழ்ச்சி முடிந்த பின் நக்கீரர் அய்யா அவர்கள் “என்னுடைய நீண்ட ஜோதிட அனுபவத்தில் நீ சொன்ன கருத்து புதிதாக இருந்தாலும், சில விஷயங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது உண்மைதான்” என்று பாராட்டினார்.

2012 ம் ஆண்டிலிருந்தே விருச்சிக ராசிக்காரர்கள் கடுமையான சிக்கல்களில் இருக்கிறீர்கள். அவரவர் வயது, இருப்பிடம், சூழ்நிலைக்கேற்ப கெடுபலன்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வீட்டில் ஒரு விருச்சிகம் இருந்தாலே அந்தக் குடும்பத்தில் நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என்ற நிலைதான் இருந்து வருகிறது. குறிப்பாகச் சொல்லப் போனால் இளைய பருவத்தினர் விரக்தியின் விளிம்பில் நிற்கிறீர்கள்.

கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக நடந்த எந்தக் குருப்பெயர்ச்சியும் விருச்சிக ராசிக்கு நல்ல, கெட்ட பலன்களைத் தரவில்லை என்பதே உண்மை. அந்த அளவிற்கு ஏழரைச் சனியின் சாதகமற்ற பலன்கள் மட்டும்தான் விருச்சிகத்திற்கு முன்னே நின்றது.

இன்னும் சொல்லப்போனால் மூன்று வருடங்களுக்கு முன் நடந்த ஒன்பதாமிடத்து உச்ச குருப் பெயர்ச்சியே விருச்சிகத்திற்கு நன்மைகளைத் தர இயலவில்லை. அந்த ஆண்டிலும் விருச்சிகத்தினர் சோதனைகளைத் தான் அனுபவித்தீர்கள்.

ஆயினும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு சிறப்பு பலனாக குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சில வாரங்களில் வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதி நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் விருச்சிக ராசிக்காரர்களை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஜென்மச் சனி அமைப்பு விலகுகிறது.

இதன்மூலம் இதுவரை இழந்த, இழந்து கொண்டிருக்கும் அனைத்தையும் விருச்சிக ராசிக்காரர்கள் திரும்ப பெறப் போகிறீர்கள். கடுமையான சோதனைக் காலம் இன்னும் சில வாரங்களில் முடிய இருப்பதால் இப்போது நடக்க இருக்கும் அனைத்து கிரகப் பெயர்ச்சிகளும் இனிமேல் உங்களுக்கு சுப விஷயங்களை மட்டுமே தரும்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் சுபக் கிரகங்கள் விரய ஸ்தானம் எனப்படும் பனிரெண்டாமிடத்தில் இருந்தால் சுபச் செலவுகள்தான் ஒருவருக்கு இருக்கும் என்பதாலும், செலவு செய்துதான் மன நிறைவை அனுபவிக்க முடியும் என்பதாலும், செலவு செய்தால்தான் ஒரு பொருளை வாங்க முடியும் என்பதாலும் குருவின் பனிரெண்டாமிடப் பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும்.

செலவு செய்யப் போகிறீர்கள் என்றால் வருமானம் வரப் போகிறது என்று அர்த்தம். வரவு வந்தால்தானே தொடர்ந்து செலவு செய்ய முடியும்? கடன் வாங்கி எந்தனை நாள் செலவு செய்ய முடியும்? எனவே இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுபச் செலவு செய்யப் போதுமான வருமானங்கள் வரும் என்பதே குருபகவான் உங்களுக்குத் தரும் செய்தி.

ஆகவே இப்போதைய குரு மாற்றத்தின் மூலம் விருச்சிக ராசிக்காரர்களின் குடும்பங்களில் இதுவரை தாமதமாகி வந்த திருமணம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல், பெண்களுக்கான பூப்புனித நீராட்டு விழா போன்ற மங்கள விழாக்கள் மற்றும் குடும்பத்தில் ஒரு புது ஜீவன் வருவதற்கான பிரசவச் செலவுகள் போன்ற சுப காரியச் செலவுகள் இருக்கும்.

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப் போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள், கனவுகள் ஆகியவை நிறைவேறும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும், மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் வருவார்.

சுய தொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். சினிமா, தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து குருவின் பார்வையால் நான்கு, ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுப் பெற்று அந்த பாவங்களுக்குரிய விளைவுகளைச் செய்யும் என்பதன்படி நான்காமிட குருவின் பார்வையால் வீடு, வாகனம், தாயார், தன் சுகம், கல்வி ஆகிய விஷயங்களில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ, ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும்.

பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்க தடங்கல்கள் விலகும்.

குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் ஆறாம் பாவம் வலுப்பெறும் என்பதால் மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன் யோசனை இல்லாத அவரசக் குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

பழைய கடனை புதுக் கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நிலம், வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும்.

எட்டாமிடம் வலுப் பெறுவதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள், வெளிநாட்டோடு வியாபாரத் தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கலாம்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.

வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.

டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்தக் குருப் பெயர்ச்சியால் தொழில் ரீதியான பயணங்கள் அடிக்கடி இருக்கும். வெளி மாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் என்பது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்து வந்த மனக் கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்லபடியாக, சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் இனிமேல் விருச்சிகத்தினருக்கு எந்தக் குறையும் வராது என்பது உறுதி.

பரிகாரங்கள்:

விருச்சிகத்தினர் ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதமிருப்பதும், வியாழன் தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஒருமுறை ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று குருபகவானை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களைத் தரும்.

No comments :

Post a Comment