Saturday, August 19, 2017

MEENAM : 2017 – GURU PEYARCHI – மீனம் : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

மீனம்:

மீன ராசிக்கு இதுவரை ஏழாமிடத்தில் இருந்து நன்மைகளைத் தந்து கொண்டிருந்த குருபகவான் தற்போது எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டம குருவாக மாறப் போகிறார். நமது கிரந்தங்களில் குருபகவான் எட்டில் இருப்பது சாதகமற்ற நிலையாக சொல்லப் பட்டிருக்கிறது. ஆயினும் மீன ராசிக்கு அது பொருந்தாது.

ஏனெனில் மீனத்திற்கு குருபகவான்தான் ராசிநாதன் ஆவார். அதுவும் இப்போது அவர் இன்னொரு சுபரான சுக்கிரனின் வீட்டிற்கு மாறப் போகிறார். அது குருவிற்கு பகைவீடுதான் ஆயினும் இந்த மாற்றத்தின் மூலம் சுபத்துவ நிலைகளே ஓங்கியிருப்பதால் உங்களுக்கு நிச்சயமாக கெடுபலன்கள் எதுவும் இருக்காது.

அஷ்டம குரு என்றவுடன் யாருக்கும் ஒருவிதமான கலக்கம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் சுபக் கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் வரும் போது எதிர்காலத்திற்கான நன்மைகளையே செய்யும் என்பதையும் பாபக் கிரகங்களைப் போல சுபர்கள் கடுமையான கெடுபலன்களை எப்போதுமே செய்வதில்லை என்பதையும் புரிந்து கொண்டால் இங்கே கலக்கத்திற்கு இடமில்லை.

உதாரணமாக அஷ்டமச் சனி செய்யும் கெடுதல்களுக்கும், அஷ்டம குருவால் வரும் விளைவுகளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் எட்டாமிடம் மாற்றங்களைக் குறிக்கும் என்பதால் மீன ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலம் மாற்றங்கள் நிறைந்த காலமாக இருக்கும். இந்த மாறுதல்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நிலையைவிட உயர்ந்த நிலையைத்தான் தரும்.

இன்னொரு முக்கிய பலனாக குருப் பெயர்ச்சிக்குப் பிறகு அக்டோபர் மாதம் 24 ம் தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் சனி பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

ஏற்கனவே அவர் இருந்த ஒன்பதாமிடம் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் எதுவும் நடக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்த நிலை என்பதால் சனியின் மாற்றம் உங்களுக்கு யோகநிலைதான். எனவே எப்படிப் பார்த்தாலும் மீன ராசிக்கு கெடுதல்கள் எதுவும் இல்லாத நன்மைகள் நடக்கும் நிலையே நடக்கும் என்பது உறுதி.

மீன ராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித், தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது புரியும்.

எனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்ப கட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித் துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்ல பலன்கள் நடக்கும்.

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். சுக்கிரனின் வீட்டில் குரு அமர்வதால் சினிமா, தொலைகாட்சி, பத்திரிகை போன்ற ஊடகத் துறையினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மாறாக நன்மைகள் அதிகம் இருக்கும்.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும்.

தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைப்படாது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு நன்மைகள் உண்டு.

பெண்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.

குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். மேலும் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக் கூடிய பெண் ஒருவர் இருக்கும் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் பெரிதாக வராது.

புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு காசி, கயா, ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும். மகான்களின் கருணைப் பார்வை உங்கள் மீது விழும்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு. மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும்.

ராசிநாதன் எட்டில் மறைவதால் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது.

குருபகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடங்களுக்குத்தான் வலிமை அதிகம் என்பதால் அவர் பார்வைபடும் 12, 2, 4 ஆகிய பாவங்கள் அதிக வலிமை அடைகின்றன.

குருவின் பனிரெண்டாமிட பார்வையால் செலவுகள் நிச்சயம் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் கண்டிப்பாக இருக்கும். பணம் இருந்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்து விடும் என்பதால் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போது வாங்க முடியும். பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மிஷின், செல்போன் போன்ற பொருட்களை வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு பொன்பொருள் சேர்க்கை உண்டு. குழந்தைகள் பேரில் சேமிக்க முடியும்.

தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் எதிர்பாராத லாபங்கள் இருக்கும். நீண்ட நாட்களாக கமிஷனை எதிர்பார்த்து செய்துவந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும். பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. தாராளமான பணப்புழக்கம் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சொன்ன சொல் தவறாது.

குருவின் நான்காமிடப் பார்வையால் வீடு, வாகனம், தாயார், தன்சுகம், உயர் கல்வி போன்ற அமைப்புக்கள் வலுப்பெறுகின்றன. வீடு வாங்குவதற்கு இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டோ வாங்குவீர்கள்.

இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. அம்மாவால் அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள்.

போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு பங்குச் சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது.

அனாவசியமான வாக்குவாதங்களை தவிருங்கள். தேவையின்றி எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். உறவினர்களால் சொத்து சம்பந்தமான வில்லங்கம் வரலாம். இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் மாறுவார்கள். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி சில மாற்றங்கள், அலைச்சல்களைக் கொடுத்தாலும் அனைத்தும் உங்களின் எதிர்கால நன்மைக்கே என்பது உறுதி.

பரிகாரங்கள்:

மீன ராசிக்காரர்கள் ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதம் இருப்பதும், வியாழன் தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஒருமுறை ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று அவரை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும்.

No comments :

Post a Comment